Shop at Amazon

Wednesday, July 25, 2018

பெண்மையைப் போற்றும் ஆண்களுக்கு சமர்ப்பணம்



எங்காவது வெளியே சென்றிருக்கும் போது சிறுநீர் கழிப்பதற்காகக் கழிப்பிடம் இல்லாமல் வீடு செல்லும் வரை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவஸ்தையை... (இதனால் தான் பல பெண்கள் பின்னர் பல சிறுநீர் நோய்க்கு உட்படுகிறார்கள்)

பயணத்திலோ, அலுவலகத்திலோ அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும் போதோ அவசரமாய் கைப்பையில் தேடி நாப்கினை எடுத்து அதை மாற்ற இடம் தேடி அலையும் கொடுமையை...

ஏதோ ஒரு கூட்டத்தில் இலேசாய் ஆடை விலகி உள்ளாடை வெளியே தெரிய நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்வையிலேயே கற்பழிக்கும் ஆயிரம் கண்களை கடந்து செல்லும் ஒரு சிரமத்தை...

ஆள் நடமாற்றம் அதிகமற்ற ஒரு சாலையில் நான்கு ஆண்கள் கூட்டமாய் நிற்கையில் அவர்களை கடந்து செல்ல வேண்டிய ஒரு பெண்ணின் உளவியலை....

பயணத்திலோ கூட்ட நெரிசலிலோ பாலுக்கு அழும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத வேதனையான நிலையை....

மாதவிலக்கு நாட்களில் கூட பல கிலோமீட்டர் நடந்தோ அல்லது நாள் பூராகவும் நின்றோ வேலை பார்க்க வேண்டிய துயரம் நிறைந்த நாட்களை...
அது ஒருபோதும் ஆண்களால் முடியாது.... இவ்வளவையும் வெகு சாதாரணமாய் அனுதினமும் கடந்து செல்லும் பெண்களின் வலிமையை ஆண்களால் ஒருபோதும் பெற முடியாது...

இந்த வலிமையைப் பெற பெண்கள் கொஞ்சம் லூசுத்தனமாய் இருந்து தான் ஆக வேண்டும் அல்லது அப்படி இருந்தால் தான் அதை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியும்...

உலகத்தின் அத்தனை கசப்புகளையும் மனதில் சுமந்துக் கொண்டு புன்னகையுடன் செல்லும் ஒரு பெண்ணை இனி சாலையில் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு நீங்கள் எந்த மரியாதையையும் தர வேண்டாம்.. அவர்களை அவர்கள் பாதையில் அமைதியாக செல்ல வழி விடுங்கள்...

என் சகப் பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வோம்.

என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவோம்.

என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்போம்.

எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டோம்.

பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபட மாட்டோம்.

பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டோம்.

பெண்களின் உணர்வுகளை மதிப்போம்.

பெண்மையைப் போற்றுவோம்.

மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்போம்.

பெண்மையை போற்றுவோம்..

- ந. சண்முக சூரியன்
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.

Sunday, July 22, 2018

காவேரித் தாயே போற்றி!

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.



ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.

ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.
சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.
நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?
'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?
முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.
சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.
காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.

“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை
மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"
என்கிறது அகநானூறு (126 : 4-5)

- நம்பிக்கை ராஜ்.

#Cauvery #காவிரி

Sunday, July 15, 2018

திருப்பூரில் நடந்த 100% ‘இயற்கை’ திருமண விழா!


குடிநீராக மழை நீர், குழந்தைகளுக்கு பனை வண்டி, செம்பு டம்ப்ளரில் தண்ணீர், பாரம்பரிய உணவுவகைகள், என்று எல்லா விஷயத்திலும் இயற்கை மற்றும் பாரம்பரியத்தை கலந்து அசத்தினர் இந்த திருப்பூர் குடும்பத்தார்.



அம்பானி வீட்டுத் திருமணம் ஆகட்டும், அடித்தட்டு நிலை மக்கள் வீட்டு திருமணம் ஆகட்டும், திருமணம் என்றாலே ஆடம்பரமாக இருக்க வேண்டும், விருந்தினர்களை வாய் பிள்ளக்க வைக்கும் அளவிற்கு உணவு வகைகள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், அந்த ஆடம்பரம் என்பது செயற்கையாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இல்லாமல், இயற்கையோடு இணைந்ததாக, நமது பாரம்பரியத்தை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும். இதைத் தான் தங்கள் திருமணத்தில் செய்து காட்டியுள்ளனர் திருப்பூரைச் சேர்ந்த மணமக்களான லோகேஸ்வரன் - கீதாஞ்சலி ரித்திகா.

திருப்பூர் பின்னலாடை நிறுவன பின்புலமாகக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் விவசாய பின்னணி கொண்ட குடும்பம் லோகேஸ்வரன் மற்றும் கீதாஞ்சலி உடையது. மணமகள் கீதாஞ்சலியின் அப்பா ரவி ஒரு இயற்கை ஆர்வலர். பெருந்துறை அருகே சிறிய கிராமத்தில் விவசாயப் பின்னணியில் வளர்ந்தவர். தனது கிராமத்தில் சாயப்பட்டறை நீரால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். மண்வளத்தைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்.

உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமல்ல என தன் மகள் திருமணத்தையும் ஒரு இயற்கைத் திருவிழாவாக பாரம்பரிய முறைப்படி நடத்த திட்டமிட்டார் ரவி. இதற்கு மணமகன் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே, நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்தனர்.
முதல் வேலையாக தங்களுக்கு சொந்தமான நிலத்தில், செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையான முறையில் திருமணத்திற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு வளர்க்கத் தொடங்கினர். அதில் விளைந்த காய்கறிகளை மட்டுமே வைத்து அவர்கள் திருமணத்திற்கு உணவு தயாரித்துள்ளனர். கூடுதலாக ஆர்கானிக் முறைப்படி எங்கெங்கு விவசாயம் செய்யப்படுகிறது என்பதை விசாரித்து திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.

“திருமணத்தை எளிமையாக, அதே சமயத்தில் பாரம்பரிய முறைப்படி, பிளாஸ்டிக் இல்லாத இயற்கைத் திருவிழாவாக நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. இதற்கு சம்பந்தி வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே மகிழ்ச்சியோடு வேலைகளை ஆரம்பித்தோம்.”

நாங்கள் புள்ளி வைக்கத் தொடங்கியதுமே, எங்களைச் சுற்றி இருந்தவர்கள் அதை வைத்து கோலம் போட உதவினர். அதாவது, இன்னும் இதையெல்லாம் திருமண விழாவில் சேர்க்கலாமே என பலரும் பல ஐடியாக்கள் கொடுத்தனர்.

“அப்படியாக உறவினர் ஒருவர் கொடுத்த ஐடியா தான் மழை நீரில் விருந்து தயாரிப்பது. அதற்கு திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்கிறார் ரவி.

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சத்துக்கள் நீங்கிய குடிநீரைத் தர விரும்பாத திருமண வீட்டார், அதிலும் புதுமையான மாற்றத்தை செய்ய விரும்பினர். அதன்படி, மழை நீரை சேமித்து அதனையே சமையலுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் அருந்த கொடுத்தனர். நீர் அருந்துவதற்கான குவளைகளைக் கூட பிளாஸ்டிக் அல்லது பேப்பர் கப்களாக இவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை. செம்புக் குவளைகளிலேயே மழை நீரை திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அருந்தக் கொடுத்துள்ளனர். இதற்காக மழை நீர் சேமிப்பவர்களிடம் சென்று சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் மழை நீரை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.


மழை நீரில் ஆக்ஸிஜன் அதிகம் இருக்கும். அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது என தெரிந்தாலும், நம்மில் பலருக்கு மழை நீரை சேமித்து வைத்து உபயோகப்படுத்தும் பழக்கம் இல்லை. ஆனால், ரவி வீட்டில் இன்றளவும் மழை நீரை தான் சமையலுக்கும், குடிக்கவும் பயன் படுத்துகின்றனர். மழையில் நனைந்தாலே காய்ச்சல் வந்து விடும் என பயப்படுபவர்கள் கூட, இவர்கள் வீட்டு திருமணத்தில் மழை நீரை அருந்தி, அதன் ருசியை அறிந்து கொண்டனர். அதோடு, தங்கள் வீட்டிலும் இனி மழை நீரை சேமித்து அதனையே குடிக்க பயன்படுத்தப் போவதாகவும் பலர் தெரிவித்தனராம்.

அடுத்தது உணவு. திருமண விருந்திற்கு தேவையான அனைத்து காய்கறிகளும் ஆர்கானிக் முறையில் கிடைத்துவிட, மசாலாப் பொடிகளையும் இவர்களே வாங்கித் தயாரித்துள்ளனர். இதனால் கலப்படம் இல்லாத மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி, ஆர்கானிக் காய்கறிகளைக் கொண்டு, மழை நீரில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சி.


  
சாப்பாட்டில் பனைகருப்பட்டி பர்பி, பாசிப்பருப்பு மாவு உருண்டை, வாழைப்பழப்பூ வடை, குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட சாம்பார் சாதம், கருப்பட்டி இனிப்பு, முக்குளிகை டீ என யாரும் அதிகம் சாப்பிட்டிராத சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுகள் இடம் பிடித்திருந்தன. தலைவாழை இலையில் உணவும், பாக்குமட்டை தட்டில் இது போன்ற நொருக்குத்தீனி வகைகளும் தரப்பட்டது.

 “ஆரம்பத்தில் இவை அனைத்தையும் செய்து முடிக்க முடியுமா, இது சாத்தியமாகுமா என்ற அச்சம் உள்ளூர இருந்தது. எனவே, ஜூலை முதல் தேதியில் திருமணத்தன்று முன்னோடியாக சிலவற்றைச் செய்து பார்த்தோம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சி. அந்த உத்வேகத்திலேயே ஜூலை 4ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவு, சந்தை என அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய முடிந்தது,” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவி.

முன்பெல்லாம் திருமணத்தின் போது பெண்களுக்கு பசு மாடுகளைச் சீராகத் தருவது தான் வழக்கமாம். ஆனால், இன்றோ பெரும்பாலான திருமண மண்டபங்களில் மணமகளுக்கு சீராக தரும் கார் ரிப்பன் கட்டப்பட்டு நிற்பதைப் பார்க்கலாம். எனவே, இதிலும் மாற்றாக சிந்தித்த ரவி,

காருக்குப் பதில் தனது மகளுக்கு இரண்டு காங்கேயம் பசுக்களை, கன்றுக்குட்டியோடு சீராக தந்துள்ளார். மண்டப வாசலிலேயே அந்த மாடுகள் கட்டிப் போடப் பட்டிருந்தன.

குழந்தைகளின் கால்களை மொபைல் போன்கள் கட்டிப் போட்டுவிட்டது என்றே கூறலாம். அந்தளவிற்கு எங்கு சென்றாலும் செல்போனில் விளையாடுவது தான் குழந்தைகளுக்கு முக்கியப் பொழுதுபோக்காக உள்ளது. ஆனால், தங்கள் வீட்டுத் திருமணத்தில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாட வேண்டும் என திட்டமிட்ட ரவி, பனவண்டி செய்து குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார். 

இதனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகள் உற்சாகமாக மண்டபம் முழுவதும் பனை வண்டியை ஓட்டி விளையாடிய காட்சியைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கென மண்டபத்தில் ஒரு பகுதியில் ஒருவர் அமர்ந்து, குழந்தைகள் கேட்க கேட்க புதுப்புது வண்டிகளை செய்து தந்துள்ளார்.

சாப்பிட்டு முடித்தவர்கள் வெளியே வரும் பாதையில், அவர்கள் கண்களைக் கவரும் வண்ணம் இயற்கை சந்தை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆர்கானிக் பொருட்கள், பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மண்பானைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை இடம் பிடித்திருந்தன. இதனால் திருமண வீட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு சந்தையின் அனுபவமும் இலவசமாகக் கிடைத்தது. ஒரே இடத்தில் தரமான பல பொருட்கள் கிடைத்ததால், மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தேவையானதை வாங்கிச் சென்றனர்.

சாப்பிட்டு முடித்தவுடன் கை துடைக்க டிஷ்யூ பேப்பர் தராமல், அதற்குப் பதில் சிறு கைக்குட்டை போன்ற காட்டன் துணிகளைத் தந்தனர். அதிலும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திருமணத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தும் காட்டன் துணியில், கையால் வரையப்பட்டவையே ஆகும்.

 “நாங்கள் வரவேற்புக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைத்தது என்னவோ 2,500 பேர் தான். ஆனால், பத்திரிகையில் இருந்த இயற்கைத் திருவிழா விபரத்தால் கவரப்பட்டு, நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதித்தவர்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேல். சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த திருமணத்தால் எங்களுக்கு கூடுதலாக 3 ஆயிரம் உறவினர்கள் கிடைத்துள்ளனர்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவி.


இப்படிப் பார்த்து பார்த்துச் செய்வதென்றால் செலவும் அதிகமாக இருக்குமே என்பவர்களுக்கு இல்லை என்பது தான் ரவியின் பதில். காய்கறிகள் உட்பட பல அவர்களது தோட்டத்தில் இருந்தே கிடைத்துள்ளது. வாண வேடிக்கை, பிளக்ஸ், பேனர், ருசிக்காக செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு என மற்ற திருமணங்களுக்கு ஆகும் அதே செலவு தான் இந்த இயற்கைத் திருமணத்திற்கும் ஆனதாக ரவி கூறுகிறார்.


ரவியின் இந்த முயற்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் ராஜ்குமார். ரவியின் பின்னலாடை நிறுவன ஊழியரான ராஜ்குமாரின் கீழ் பத்து பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட, அவர்கள் அனைவரையும் மேற்பார்வையிடுவது ராஜ்குமாரின் வேலை. அவர்கள் அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட கடமையை கண்ணும் கருத்துமாக செய்திருந்தனர். இதற்கு விழாவுக்கு வந்திருந்தவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே சான்று.

“இந்த ஒரு திருமணத்தை இயற்கை முறையில் செய்து முடித்தது மட்டும் எங்கள் வெற்றியல்ல. எங்களைப் பார்த்துப் பலரும் இது போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத இயற்கைத் திருவிழாக்களாக பாரம்பரிய முறையில் நம் வீட்டு சுபகாரியங்கள் நடைபெற வேண்டும். இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்ற பலரின் சந்தேகத்திற்கு பதிலாகத் தான் எங்கள் வீட்டு திருமணத்தை கருதுகிறோம். இதைப் பார்த்து இன்னும் பலர் இதே போன்று திருமணங்கள் நடத்த வேண்டும். ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாக வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பலருக்கும் ஒரு முன்மாதிரி திருமணமாகத் தான் இதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்,” என்கிறார் ரவி.

இயந்திர உலகில் உறவுகள், நண்பர்கள் ஒரே இடத்தில் மகிழ்ச்சியாக சந்திப்பது என்பதே அரிதாகி வருகிறது. இது போன்ற திருமணம், பிறந்தநாள் விழாக்கள் மட்டுமே அனைவரையும் ஒன்றிணைக்கும் முக்கிய விசேஷ தினங்களாக உள்ளன. அத்தகைய சிறப்பான நாட்களை, இது போன்று முன்மாதிரி விழாவாக திட்டமிட்டு நடத்துவதன் மூலம், விருந்துக்கு வருபவர்களின் வாழ்த்துக்களை மட்டுமின்றி, பாராட்டுகளையும் எளிதாக பெறலாம் என்பதே இத்திருமணம் நமக்கு சொல்லும் சேதி.

இந்தத் திருமணம் வித்தியாசமானது மட்டுமல்லாது, அனைவரும் இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது பாராட்டுதலுக்குரியது.
 

Tuesday, July 3, 2018

பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..!


பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..! 






இந்தியர்களின் கவனத்துக்கு...

மரங்களை அழிப்பது என்பது இயற்கையின் மீது மனித இனம் நிகழ்த்தக்கூடிய மிக முக்கியமான வன்முறை.
மனிதன் நாகரிகம் அடையத் தொடங்கியதிலிருந்தே இயற்கைமீது வன்முறை செலுத்தத் தொடங்கி விட்டான். ஆரம்பத்தில் தேவைக்காக இருந்த விஷயங்கள் எல்லாம் காலப்போக்கில் வணிகத்துக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் மாற ஆரம்பித்தன. பிரச்னை தொடங்கியது. மரங்களை அழிப்பது என்பது இயற்கையின் மீது மனித இனம் நிகழ்த்தக்கூடிய மிக முக்கியமான வன்முறை. தேவைகளை மீறி வணிகமயமும் மற்றவையும் மரம் வெட்டுவதைச் சர்வதேசச் சந்தையாக மாற்றியுள்ளது. காடுகள் அழிப்பு இங்குதான் தொடங்குகிறது. ஆனால், நமது அண்மை நாடான பாகிஸ்தானில் ஒரு மாபெரும் முன்னெடுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹெரோஷாவின் பெரும்பாலான நிலப்பரப்புகள் 2015க்கு முன்பு வரை வறண்ட மலைகள்தாம். ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது பாகிஸ்தான் மக்களை மட்டுமல்ல உலகையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. மில்லியன்கணக்கான மரங்கள் அங்கு நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. காடுகளை அழிப்பதற்கு எதிராகப் போராட ஒரு காட்டையே உருவாக்கிவருகின்றனர் பாகிஸ்தான் மக்கள். ஹெரோஷா பகுதியில் 2015 லிருந்து 2016க்குள் 16,000 தொழிலாளர்கள் 9,00,000 மரக்கன்றுகளை நட்டு காடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவை அனைத்துமே வேகமாக வளரக்கூடிய யூகலிப்டஸ் வகை மரங்கள். கைபெர் பக்துன்க்வா ( Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் பல்வேறு இடங்களில் கடும் உழைப்போடு இந்த மரம் நடும் வேலை நடந்து வருகிறது..
``அந்த நிலப்பரப்பு இதற்கு முன்பு முற்றிலும் வறட்சியின் நிலமாக இருந்தது. ஆனால், தற்போது வளம் கொழிக்கும் பகுதியாக மாறியுள்ளது” என்கிறார் வனத்துறை மேலாளர் பெர்வைஸ் மனன்(Pervaiz Manan). சில வருடங்களுக்கு முன்பிருந்த புகைப்படங்களையும் தற்போதுள்ள புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த வறட்சியை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் எனவும் சொல்கிறார். அந்தப் புதிய மரங்கள் அப்பகுதிக்கே புத்துயிர் ஊட்டி வருகிறது. இயற்கைச் சீற்றங்களையும் காலநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ள இந்த மரங்கள் உதவியாய் உள்ளன. மலைப்பகுதியின் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான வெள்ள ஓட்டத்தைக் குறைக்கிறது. மரங்களின் வளர்ச்சிக்குப் பிறகு மழைப்பொழிவும் நன்றாக உள்ளது என்கிறார் வனத்துறை மேலாளர் பெர்வைஸ் மனன்.
அங்கிருக்கும் ஊர்வாசிகளும் இதைப் பொருளாதாரப் பலனாகப் பார்க்கின்றனர். இந்தக் காடுகளின் மூலம் வருமானம் வரும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முன்பு சும்மா கிடந்த நிலம் இன்று பயனுள்ளதாக மாறியுள்ளது என மகிழ்ச்சியடைகின்றனர். கைபெர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்குப் பகுதியின் பல்வேறு பள்ளத்தாக்குகள் 2006 லிருந்து 2009 வரை பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இப்போது இந்தப் பகுதி முழுவதும் அன்னாசி மரங்களும் மரக்கன்றுகளும் காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதி வந்தால் நீங்கள் ஒரு மரக்கன்றை நடாமல் செல்ல முடியாது. ஹெரோஷா பகுதியிலும் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து நிறைய மரங்கள் வளர்க்கப்படுவதற்கு பில்லியன் மரங்கள் சுனாமி (Billion Tree Tsunami) எனும் அரசின் முன்னெடுப்புதான் முக்கியக் காரணம். கைபெர் பக்துன்க்வா மாகாணம் முழுவதும் 42 வகையான 300 மில்லியன் மரங்களை நட்டு வளர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது இந்தத் திட்டம். மேலும் 150 மில்லியன் மரங்களானது நில உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. காடுகளை மீளுருவாக்கம் செய்வதில் இன்னும் 730 மில்லியன் மரங்களை வளர்க்கலாம் என இந்தத் திட்டம் கூறுகிறது. ஏறக்குறைய மொத்தக் கணக்கு 1.2 பில்லியன் மரங்கள் எனத் திட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களும் அவர்களுடைய இணையத்தில் இருக்கிறது. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் (International Union for Conservation of Nature(IUCN) ) இத்திட்டத்தினையும் அதற்கான செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளது. இந்த அமைப்பினை பசுமை என்ஜிஓ (Green NGO) என்றும் பலரும் குறிப்பிடுவதுண்டு. இந்தத் திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. இவ்வளவு அதிகமான மரத்தை நட்டு காடுகளை மீளுருவாக்கம் செய்வது என்பது நிஜத்தில் முடியாத காரியம் என்றனர். அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரையின் படி 12% காடுகள் பாகிஸ்தானில் இருக்க வேண்டும். ஆனால், வெறும் 5.2% மட்டுமே பாகிஸ்தானில் காடுகளாக இருக்கின்றன.
கடந்த 60 வருடங்களில் பாகிஸ்தானின் சிந்து நதிக்கரையில் அமைந்திருந்த 60 சதவிகிதக் காடுகள் அழிந்து போய்விட்டன. தொடர்ச்சியாகச் சிந்து நதியில் நீர்வரத்து குறைந்ததும் 1980களில் நிகழ்ந்த அதிகப்படியான மரங்கள் வெட்டப்பட்டதும் காடுகள் அழிந்துபோனதற்கு முக்கியக் காரணம். பில்லியன் மரங்கள் சுனாமி திட்டம் நவம்பர் 2014ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக கைபெர் பக்துன்க்வா மாகாண அரசு 160 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து இத்திட்டத்தினை செயல்படுத்திப் பல்வேறு பராமரிப்புகளைச் செய்து வருகின்றனர். 2020க்குள் முழுவதுமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். கைபெர் பக்துன்க்வா மாகாணமானது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (Pakistan Tehreek-e-Insaf) எனும் அரசியல் கட்சியால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தலைமையில் இயங்கி வருகிறது. அடுத்த வருடம் பொதுத்தேர்தல் வரவிருப்பதால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (Pakistan Muslim League-Nawaz (PML-N)) கட்சிக்கு இது நெருக்கடி கொடுக்கக்கூடியது. இந்தத் தேர்தலில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் முக்கியப் பங்கு வகிக்கும் என அனைவராலும் சொல்லப்படுகிறது. இம்ரான் கான் சுற்றுச்சூழல் தொடர்பான வாக்குறுதிகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

காடுகளை மீளுருவாக்கம் செய்யும் இந்தத் திட்டம் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது என ஒருபுறம் சொல்லப்பட்டாலும் பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இதனை வரவேற்கின்றனர். மக்கள் பலரும் இதில் தன்முனைப்பாகப் பணியாற்றுகின்றனர். மொத்தத்தில் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்வதுதான் வருங்காலத்தின் தேவையாக இருக்கும் என்பதை பாகிஸ்தானின் மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.